க.பரமத்தி, டிச. 31: க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் பெரியநடுப்பாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள அம்மனை ஆண்டுதோறும் முக்கிய ஊர்களுக்கு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து சென்று அங்குள்ள கோயிலில் வைத்து வழிபாடு முடிந்து மீண்டும் கோயிலுக்கு கொண்டு வருவது வழக்கம்.இந்தாண்டு விழா புன்னம் ஊராட்சி சடையம்பாளையம் விநாயகர் கோவிலில் கடந்த 12ம் தேதி காப்புகட்டி சாமிக்கு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. கடந்த 26ம் தேதி மாலை பக்தர்கள் புறப்பட்டு பெரியநடுப்பாளையம் கோயிலுக்கு சென்று மாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று புன்னை வனநாதர் சுவாமி கோயில், வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், கைலாசபுரம் செல்வகணபதி ஆகிய கோயில்கள் வழியாக கொண்டு வரப்பட்டு, சடையம்பாளையம் கோவிலை வந்தடைந்ததுடன் திருவிழா துவங்கியது. அங்கு விநாயகர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் பக்தர்களால் வைக்கப்பட்ட பொங்கலை ஒவ்வொரு பானையிலிருந்தும் எடுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்து படைத்து வடிசோறு பூஜையும் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் கொண்டு வரப்பட்டு சாமிக்கு ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து கிடாவெட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் மாலையில் மஞ்சள்நீர் விளையாட்டு நிறைவு பெற்று கோவிலுக்கே குதிரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.அப்போது கைலாசபுரம் காலனியில் சிறப்பு வழிபாடு வாணவேடிக்கை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஊர் கொத்துக்காரர் சண்முகம், கைலாசபுரம் முத்துசாமி, செந்தமிழ் இளைஞர் மன்ற அணியினர் பக்தர்கள் செய்திருந்தனர்.